எனக்கிருக்கிற பக்குவம் தமிழக காங்கிரஸுக்கு இல்லையே... ப.சிதம்பரம் வருத்தம்

ப.சிதம்பரத்தின் இந்தப் பேச்சு தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற அவரது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக உள்ளதாக காங்கிரஸ் கோஷ்டியினர் குமுறுகின்றனர்.
மறைந்த முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியனின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு செல்லப்பாண்டியனின் படத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். அவரது பேச்சு:
முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் மிகப் பிரபலமான வழக்கறிஞர். அவர் உருவாக்கிய வழக்கறிஞர்கள் ஏராளம். இவரிடம் பயிற்சி பெற்ற ரத்தினவேல் பாண்டியன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்தார். ஆவுடையப்பன் உள்பட பல வழக்கறிஞர்களை உருவாக்கியவர்.
வழக்கறிஞர் தொழிலில் பலநெறிகளை கடைபிடித்ததுபோல் அரசியலிலும் கடுமையான நெறிமுறைகளை கடைபிடித்தார். நல்லவேளை அந்த காலத்தில் அவர் வாழ்ந்தார். அதனால்தான் நெறிகளை கடைபிடிக்க முடிந்தது.
செல்லப்பாண்டியன் கருத்தை கேட்காமல் மூப்பனாரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். 1962-ல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 18 தொகுதிகளிலும் செல்லப் பாண்டியன் நியமித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றார்கள். காலம் ரொம்ப மாறிப்போச்சு, காலத்திற்கு ஏற்ப இளையவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி உள்ளார். என்னைப் போன்ற ஒத்த வயது உடையவர். ராஜீவ்காந்திக்கு என்னை விட 2 வயது அதிகம் இருக்கும். இப்போது அடுத்த காங்கிரஸ் தலைவராக என்னைவிட இளையவரான ராகுல்காந்தியை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அந்த பக்குவம் தமிழக காங்கிரசுக்கு வரவேண்டும்.
கட்சி வலுவடைய மாவட்ட, வட்டார தலைவர்களை நியமிக்க வேண்டும். அப்போது நம்மை விட இளையவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வரவேண்டும்.
இதற்கு மனதளவில் எல்லோரும் தயாராக இருக்கிறோம். ஆனால் செயல்பாடு என்று வரும்போது தயங்குகிறோம். இளைஞர்களை நியமிக்கும் போதுதான் காங்கிரசுக்கு புதிய ரத்தம் கிடைக்கும்.
1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது. இது நமது குற்றம்தான். புதிய தலைமையை தேடி பெறாதது நமது குற்றம்தான். எனவே காங்கிரஸ் மீண்டும் உயிர்ப்பித்து எழ வேண்டுமானால் மாவட்ட, வட்டார அளவில் புதியவர்களை தேர்ந்து எடுத்து அவர்கள் கையில் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை.
யாரை நியமித்தாலும் சரி அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துப்போக வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications