தமிழகத்திற்கு டிமிக்கி கொடுத்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை
சென்னை: தென்மேற்கு மட்டுமல்ல வடகிழக்கு பருவமழையும் தமிழகத்திற்கு போதிய மழை அளிக்காததால் மாநிலம் மோசமான மழைக்காலத்தை கண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது தமிழகத்தில் பருவமழைக் காலத்தில் கூட சரியாக மழை பெய்யவில்லை. வழக்கமாக பெய்ய வேண்டிய அளவைவிட சென்னையில் 30 சதவீதமும், மதுரையில் 45 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் 413.6 மிமி மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 14 சதவீதம் குறைவாக 356.6 மிமி மழை தான் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலம் முடிய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தமிழகக் கடலோரம் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையையே மக்கள் நம்பியுள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை துணை தலைவர் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தமிழகத்தின் வடக்கு பகுதியில் மேகமூட்டத்தையே காணவில்லை. மழை பெய்தால் தென்மாவட்டங்களில் தான் பெய்யும். இலங்கையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு தான் தட்டுப்பாடாகிவிட்டது. கடந்த ஆண்டு இதே நேரம் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த சென்னை ஏரிகளில் தற்போது குறைவான அளவே நீர் உள்ளது.












Click it and Unblock the Notifications