கட்டாயப்படுத்தி ஈழத் தமிழப் பெண்களை ராணுவத்தில் சேர்க்கிறார்கள்... நெடுமாறன்
சென்னை: ஈழத்தில் கட்டாயப்படுத்தி தமிழப் பெண்களை ராணுவத்தில் சேர்த்து கொடுமை செய்து வருகின்றனர். இதை உலக சமுதாயம் தடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை ராணுவத்தில் முதல் முறையாக தமிழ் பெண்களைச் சேர்க்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பித்த பெண்களை ராணுவப் பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
பயிற்சி முகாம்களில் உள்ள அவர்களைச் சந்திக்க பெற்றோர், குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்
பயிற்சியில் சேர்க்கப்பட்ட 103 பெண்களும் அங்கிருந்து வெளியேற விரும்புவதாகவும், ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி பயிற்சி பெற வைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இலங்கை ராணுவம், தமிழ்ப் பெண்களைக் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதனை சர்வதேச சமுதாயம் கண்டிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications