35 வழக்குகளிலும் ஜாமீன்... சிறையிலிருந்து விடுதலையானார் பி.ஆர். பழனிச்சாமி!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக அரசுக்கு புகார்கள் வந்தன. முன்னாள் ஆட்சியர் சகாயம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தற்போதைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின்படி வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அரசு இடங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் கற்கள் முறை கேடாக வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
பி.ஆர்.கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி அவரது மகன்கள் செந்தில்குமார், சதீஷ்குமார், மனைவி செல்வி, மகள் சிவரஞ்சனி, உறவினர்கள் முருகேசன், தெய்வேந்திரன், ஒலிம்பஸ் கிரானைட் அதிபர்கள் துரைதயாநிதி, நாகராஜன், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ் உள்பட பலர் மீது முறைகேடு புகார்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதன் அடிப்படையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆக., 20 ல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பி.ஆர்.பழனிச்சாமி மீது பொதுச்சொத்தை ஆக்கிரமித்தல், வெடி பொருட்கள் பதுக்கி வைத்தல், பாசன கண்மாயை அழித்தல் உள்பட 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் இருந்து வெளிவர அவர் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பி.ஆர்.பழனிச்சாமி ஜாமீன் கேட்டு சென்னை உயர்ந்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி செல்வம் கைது செய்யப்பட்ட 15 வழக்குகளில் பி.ஆர்.பழனிச் சாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவும், தினமும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் மீதமுள்ள வழக்குகளில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க கேட்டும் பி.ஆர்.பழனிச்சாமி சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பி.ஆர்.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீனும், மீதமுள்ள வழக்குகளில் முன்ஜாமின் கிடைத்ததை அடுத்து, நான்கு மாதங்களாக நெல்லை மத்திய சிறையில் இருந்த அவர், திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு விடுவிக்கப்பட்டு மதுரைக்கு காரில், புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications