எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்
நாமக்கல்லை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 4 ஆயிரம் லாரிகள் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கிலோ மீட்டர் தூரத்தை குறைத்து வாடகையை வழங்கி வருவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இந்த சங்கத்தின் லாரிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாசை, சிலிண்டரில் நிரப்பும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு புதிய வாடகை ஒப்பந்தத்தினை அமல்படுத்தவில்லை என்பது இவர்களின் புகார். மேலும் கூடுதலாக பங்கேற்ற 600 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு பணி உத்தரவும் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட சங்க செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் அவகாசம் கோரியதையடுத்து இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உடன்பாடு எட்டப்படாததால், வியாழன் காலை முதல் (டிசம்பர் 20) பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனங்களுக்கு காஸ் ஏற்றாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சங்கத் தலைவர் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து திட்டமிட்டபடி டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.