மோடி பிரதமர் வேட்பாளரா?... பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பாஜக!

பிரதமர் பதவிக்கு மோடி குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவருக்கு ஆதரவாக பாஜகவுக்குள் சில தலைவர்கள் ஏற்கனவே ஜால்ரா தட்டி பேசி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் அத்வானியே கூட மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று கூறும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
தற்போது குஜராத் தேர்தலில் கடந்த முறையை விட 2 இடங்கள் குறைந்து போய் வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரிய வெற்றியாகவே மோடியின் வெற்றி பார்க்கப்படுகிறது. எனவே அவரது பிரதமர் கனவு மேலும் பிரகாசமாகியுள்ளாதகவும் கூறப்படுகிறது.
எனவே மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவீர்களா என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என ஊகத்தின் அடிப்படையில் கூற முடியாது. இப்போது அவரது வெற்றியைக் கொண்டாட வழி விடுங்கள். பாஜகவில் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர். இளைஞரால் வழிநடத்தப்படும் குடும்ப ஆட்சி போன்றது அல்ல பாஜக. உரிய நேரத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மோடிக்காக குஜராத்திலேயே முகாமிட்டு தீவிரமாக பணியாற்றியவரான ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், அத்வானி எதிர்ப்பாளருமான அருண் ஜேட்லி கூறுகையில், ஊடகங்களின் பார்வையில் இது உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் பிரதமர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
அதேசமயம், ராம் ஜேட்மலானி வழக்கம் போல பளிச்சென பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், குஜராத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதன் மூலம், பிரதமர் வேட்பாளருக்கு மோடி தகுதியானவர் என்பது நிரூபணமாகி உள்ளது என்றார். இவர் தற்போது கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications