30 டிஎம்சி நீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

இந்தப் புதிய மனு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தமிழகம் தாக்கல் செய்துள்ள புதிய வழக்கில், தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீரை டிசம்பர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், டிசம்பர் 6-ம் தேதி இரவு 10 மணிக்குத்தான் காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட்டது. அதை 9-ம் தேதி நிறுத்தி விட்டது. டிசம்பர் 7-ம் தேதி கூடிய காவிரி கண்காணிப்புக் குழு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கணக்கிடாமல் டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவு, ஒரு போக சாகுபடியைக்கூட செய்ய வழியில்லாத தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
டிசம்பர் மாதம் முழுவதும் 12 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழு பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையத்தில் கர்நாடக அரசு முறையிட்டுள்ளது. ஆனால், அந்த மனுவின் நகலை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவில்லை.
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி, கர்நாடகத்தின் நான்கு அணைகளில் இருந்து 103.2 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்த அந்த மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 14-ம் தேதிவரை கர்நாடக அரசு 114.4 டிஎம்சி நீரை பயன்படுத்திவிட்டு மேலும் நீர் தேவைப்படுகிறது என்று கூறுவது நியாயமற்றது.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு தேவையான நீர் தமிழக அணைகளில் இல்லை.
குறைந்தபட்சம் 18 டிஎம்சி நீரையாவது உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் காவிரி கண்காணிப்புக் குழு அளித்த 12 டிஎம்சி நீரையும் சேர்த்து வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications