ரூ.4 கோடி சொத்துக்காக கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல முயற்சி: கமிஷனரிடம் பெண் புகார்
சென்னை: ரூ.4 கோடி சொத்துக்காக தனது கணவருக்கு அவரது உறவினர்கள் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல முயற்சி செய்வதாக பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி வளர்மதி (33). அவர் தனது மகள் சர்மிளாவுடன்(14) சென்னை போலீஸ் கமி்ஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. கடந்த ஜூலை மாதம் எனது கணவர் ஆறுமுகம் உடல்நிலை பாதிக்கப்பட்டார். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவானது. பின்னர் கணவரின் உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த மாதம் 10ம் தேதி ஒரு மருந்து பாட்டிலை என்னிடம் கொடுத்து சாப்பாட்டில் கலந்து கணவருக்கு கொடுக்க சொன்னார்கள். இது என்ன மருந்து என்று கேட்டபோது இதனை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறிய அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
என் கணவர் படுக்கையில் இருப்பதை பயன்படுத்தி எனது கணவரின் அண்ணன் கோதண்டம், கணவர் பெயரில் இருந்த வீட்டை மாற்றி எழுதிக் கொண்டார்.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்தும் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். ரூ.4 கோடி மதிப்பிலான சொத்துக்காக எனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் (மெதுவாக ஆளை கொல்லும் விஷம்) கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். நான் எனது மகளுடன் கஷ்டப்பட்டு வருகிறேன். அவரது சொத்துக்களை எனது கணவரிடம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications