இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக நாளை சிறப்பு போலியோ முகாம்
சென்னை: தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவோரின் குழந்தைகளுக்காக நாளை சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்ஸ் போலியோ சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாலும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்ததாலும், மார்ச் 2004-க்கு பிறகு போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இவ்வாறு அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதன் காரணமாக அக்குழந்தைகள் போலியோ போன்ற கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகுவதோடு, நோய் பரவவும் ஏதுவாகிறார்கள்.
இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக வருகின்ற 22-12-2012 சனிகிழமை அன்று போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனை செயல்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம், மேம்பாலம், தொழிற்சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே பணிகள், செங்கற்சூளை, நரிக்குறவர் தங்குமிடம், வேளாண் தொழிலாளர் வசிப்பிடம், மீன்பிடித் தொழிலுக்காக இடம் பெயர்ந்து வாழும் மீனவ பகுதி, சாலையோர குடியிருப்புகள், வாத்து மற்றும் ஆடு மேய்ப்பவர், இலங்கை அகதிகள் வசிக்கும் இடம் ஆகிய பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள் கணக்கெடுப்பும் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த போலியோ சிறப்பு முகாம்களில் ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதிலும் சுமார் 5400 பகுதிகளில் 22-ம் தேதி சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாம் வாயிலாக ஏறக்குறைய 35,000 குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்காக கூடுதலாக போலியோ சொட்டு மருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications