காவிரி: நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா மீண்டும் கடிதம்
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் உடனே வெளியிட வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை கமிட்டி அமைக்க வேண்டும் என கடந்த 20-ந்தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் காவிரி படுகை மாவட்டங்கள் பேரழிவை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. 21-ந் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் சுமார் 8.8 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது.
பற்றாக்குறை இருந்தும் கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நீரை பயன்படுத்தி வருகிறது. எனவே எனது முந்தைய கோரிக்கைபடி 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் உத்தர விடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வெளியிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை கமிட்டியும் அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்த வில்லை. அதை உடனடியாக அமல்படுத்தி அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்தால் வாடும் பயிர்களை குறைந்த அளவிலாவது தற்போது காப்பாற்ற இயலும். கடந்த 5-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு எப்போது வெளியிடுவீர்கள் என்ற தகவலை தெரிவிக்கும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் சுப்ரீம் கோர்ட்டு கோரிக்கை விடுத்தது. காவிரி கண்காணிப்பு கமிட்டியின் 31-வது கூட்டம் கடந்த 7-ந்தேதி நடந்தது. அதில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் அதாவது விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அது சுப்ரீம் கோர்ட்டில் 10-ந்தேதி பதிவாகியுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு ஜுன் 25-ந்தேதி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதை 1991-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதே போன்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும் உடனே அறிவிக்க வேண்டும். எனவே மிக மோசமான நிலையில் வாடும் தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் உடனே வெளியிட நீர்வளத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்துவீர்கள் என நம்புகிறேன். இந்த விஷயத்தில் உங்களின் உடனடி நடவடிக்கையையும், சாதகமான பதிலையும் எதிர் பார்க்கிறேன் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications