தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்
சென்னை: டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புள்ளிவிவரமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோசமான வன்கொடுமை
பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர்.

குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பு
2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

வன்கொடுமை புள்ளிவிபரங்கள்
தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குறைவில்லை. பெண்களுக்கு எதிராக கடந்த 2008ம் ஆண்டு 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்முறையும் பதிவாகியுள்ளன. இதே 2009ம் ஆண்டு 596 பாலியல் குற்றங்களும், 2010ம் ஆண்டு 686 பாலியல் வன்கொடுமை குற்றங்களும் பதிவாகியுள்ளன. 2011ம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமை குற்றங்களும், 2012ம் ஆண்டு 528 குற்றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

மிரட்டப்படும் சிறுமிகள்
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று மிரட்டியே மாணவிகளை பணியவைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளியே சொல்வதில்லை என்பதால், ஏராளமான குற்றங்கள் வெளியுலகுக்கு தெரியாமலேயே அமுங்கிப் போய்விடுகின்றன. இதுபோன்ற குற்றங்களை தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே மாணவிகளுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications