மணிப்பூர் நடிகை விவகாரம்- போராட்டத்தின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் டிவி நிருபர் பலி
இம்பால்: மணிப்பூரில் நடிகை மொமோகா மீதான தாக்குதலைக் கண்டித்து இம்பாலில் இன்று நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிவி நிருபர் ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி நடிகை மொமோகா இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்த மொமோகாவை அங்கு வந்த நாகலாந்து தனிநாடு கோரும் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர் கடுமையாகத் தாக்கி கீழே இழுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகை மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் மணிப்பூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் இம்பாலில் நேற்று முன்தினம் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்ற நடிகர்- நடிகையர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலரும் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இன்று 2-வது நாளாக முற்றிலுமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இம்பாலில் நாகலாந்து அமைப்பினருக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் சிலர் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்க முயற்சித்திருக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டிவி நிருபர் ஒருவர் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நிருபர் உயிரிழந்திருக்கிறார்.
இதனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.