டெல்லி காவலர் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் மரணமடைந்தார் -பிரேதப் பரிசோதனை அறிக்கை

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது போலீஸ்காரர் சுபாஷ் தோமர் காயமடைந்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
தோமர் தாக்குதலில் இறக்கவில்லை என்றும் அவர் மாரடைப்பு ஏற்பட்டுத்தான் இறந்தார் என்றும் புதுத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.
இதையடுத்து இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான விசாரணையை டெல்லி குற்றப் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
ஆனால் தோமர் மரணம் குறித்த டெல்லி காவல்துறையின் கூற்று என்னவென்றால், போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்பதாகும்.
ஆனால் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தோமருக்குப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சிலர் கூறுகையில், தோமரின் உடலில் பெரிய அளவிலான காயம் எதுவும் இல்லை என்பது. இதுகுறித்து டாக்டர் சித்து என்பவர் கூறுகையில், காவலரின் உடலில் எந்தவிதமான பெரிய காயமும் இல்லை. குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான காயம் ஏதும் இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால்தான் அவர் இறந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
தோமர் தாக்கப்படவில்லை - நேரில் பார்த்தவர் தகவல்
இந்த நிலையில், காவலர் தோமர் தாக்கப்படவில்லை என்று நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சாட்சி கூறுகையில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. தோமர் நிச்சயம் தாக்கப்படவில்லை என்றார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார் தோமர் -பிரேதப் பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோமர் தாக்கப்பட்டதாகவும், அதனால் அவரது விலா எலும்புகள் கடுமையாக சேதமடைந்து உடைந்து போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் தாக்குதலில் கடுமையான காயத்தை தோமர் சந்தித்ததாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கழுத்து மற்றும் மார்பில் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருப்பதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும் பெருமளவில் ரத்தம் வெளியேறியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது டெல்லி போலீஸார் என்ன சொல்கிறார்கள் என்றால், இத்தகைய கடுமையான காயம் காரணமாகவே தோமருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் இந்த அறிக்கைக்கும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவரும், மருத்துவக் கண்காணிப்பாளருமான சித்துவுன் கூற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே தோமருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக அடித்துக் கூறுகிறார் சித்து. இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் இப்படிக் கூறுகையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாக்குதல், காயம் என்று தகவல்கள் இடம் பெற்றிருப்பது பெரும் முரண்பாடாக உள்ளது.
கெஜ்ரிவாலின் கட்சியை முடக்கிப் போடும் முயற்சியா?
ஒருவேளை இது தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை முடக்கிப் போடும் முயற்சியாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் சந்தேகப் பார்வை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications