தடையை மீறி கிறிஸ்துமஸ் ஊர்வலம் போன 2 பெண் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குலசேகரம் கல்லடிமாமூட்டில் இருந்து கான்வென்ட் நோக்கி ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது.
அதேசமயம், வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பாரதீய ஜனதா சார்பில் குலசேகரம் செருப்பாலூர் அம்மன் கோவிலில் இருந்து நாகக்கோடு வரை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இருதரப்பினருமே, மாலையில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் இதனால் பிரச்சினை வரும் என்பதால் இரு தரப்பும் நேரங்களை மாற்றியமைக்குமாறு போலீசார் கூறினர். அதற்கு இருதரப்பினரும் உடன்படவில்லை. இதையடுத்து போலீசார் இருதரப்பு ஊர்வலத்துக்கும் அனுமதி மறுத்தனர். மேலும், ஆர்.டி.ஓ. மோகனசந்திரன் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. எனவே இருதரப்பு ஊர்வலத்துக்கு ஆர்.டி.ஓ. தடை விதித்தார்.
ஆனால் அதை மீறி நேற்று மாலை இருதரப்பினரும் தடையை மீறி ஊர்வலம் செல்வதற்காக திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. மாலை 6 மணி அளவில் கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை சார்பில் ஊர்வலத்துக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு போலீஸார் கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் விஜய தரணி, புஷ்பலீலா ஆல்பன் மற்றும் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தலைமையில் சாலை மறியலில் குதித்தனர்.
இதையடுத்து அங்கு கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். பின்னர் மைக்கில் பேசிய வாலிபர் ஒருவர் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே போலீஸ் அதிகாரிகள் அவரது மைக்கை பறித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென மறைந்திருந்த சிலர் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் போலீஸ் வேன் உடைந்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். என்றாலும் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர்.
3 ரவுண்டுகள் வெடித்ததில் கண் எரிச்சலால் கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடி கலைந்தனர். சற்று நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் அந்த பகுதி முழுவதும் கற்களும், செருப்புகளுமாக போர்க்களம் போல காட்சியளித்தது. கல்வீச்சில் 9 போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உள்ளிட்ட 256 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.