ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திய பெண்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை கடத்திய பெண் போலீசாரிடம் சிக்கினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆத்துமேடு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி சந்திரன். அவரது மனைவி கிருஷ்ணவேணி(19). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திங்கட்கிழமை இரவே அவர் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கிருஷ்ணவேணியின் பெற்றோர் செல்வம் மற்றும் செல்வாம்பாள் அவருடன் மருத்துவமனையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணவேணி இருந்த வார்டுக்கு இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். தனது உறவினருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதை பார்க்க வந்ததாகவும் கூறிய அப்பெண் செல்வம் மற்றும் செல்வாம்பாளிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் கிருஷ்ணவேணியின் பெற்றோர் வெளியே சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த இளம்பெண்ணையும் காணவில்லை, கிருஷ்ணவேணியின் குழந்தையையும் காணவில்லை. இதையடுத்து மருத்துவமனை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையைத் திருடிய பெண் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார்.
அங்குள்ளவர்களிடம் தனக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் பிரசவம் நடந்ததாகவும், தன்னை வீட்டுக்கு ஆட்டோ பிடித்து அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். உடனே அங்கு ஆம்புலன்ஸும் வந்தது. அதில் இருந்த பணியாளர்கள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தொப்புளில் இருந்த அரசு மருத்துவமனை கிளிப்பை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பெண்ணையும், குழந்தையையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய பெண்ணைப் பார்த்ததும் இவர் தான் எங்கள் பேரனை தூக்கிச் சென்றவர் என்று கூறினர். இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் அதை தாயிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அப்பெண் கூறியதாவது,
என் பெயர் காஞ்சனா(35). வீராணம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த மாதேஸின் மனைவி நான். எனக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசையாக இருந்தது. இந்நிலையில் கர்ப்பமான என்னை உறவினர்கள் தாக்கியதில் 2 மாத கரு கலைந்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினேன்.
நேற்று எனக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றேன். நான் எந்த பெட்டில் இருந்து சிகிச்சை பெற்றேனோ அந்த பெட்டுக்கு சென்றேன். அப்போது அதற்கு பக்கத்து பெட்டில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதைப் பார்த்து அதன் மீது ஆசை வந்தது. இதையடுத்து அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வீ்ட்டுக்கு செல்ல முயற்சி செய்தேன் என்றார்.
அவருக்கு மீண்டும் வயிறு வலி வந்ததால் நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications