குடிபோதையின் விபரீதம்- வக்கீலை பாட்டிலால் குத்த முயன்ற இளைஞர்!
காரைக்கால் : காரைக்காலில் வழக்கறிஞரை பாட்டிலால் குத்த முயன்ற இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். வரிச்சிக்குடியை அடுத்த கீழகாசாகுடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (32). இருவரும் நண்பர்கள். கருத்து வேற்றுமை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காரைக்கால் மதகடி மது கடை அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், வழக்கறிஞர் முருகானந்தம் வீட்டுக்கு பொருள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மது கடையில் இருந்து வந்த விஜயகுமார், முருகானந்தம் மீது மோதியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபம் அடைந்த விஜயகுமார், கடைவாசலில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து வழக்கறிஞர் முருகானந்ததை குத்த முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்தோர் விஜயகுமாரை தடுத்து வழக்கறிஞரைக் காப்பாற்றியுள்ளனர். மேலும், இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications