திரினமூல் காங். விழாவில் அழகிகள் குத்தாட்டம்.. பணம் வீசி மகிழ்ந்த 'தலைவர்கள்'!
கொல்கத்தா: மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி நடந்த விழாவின்போது நடன அழகிகளைக் கூட்டிவந்து டான்ஸ் ஆட வைத்து, அவர்கள் மீது பணத்தாளை வீசி எறிந்து உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர் அக்கட்சியினர். இது மேற்கு வங்க மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகே திரினமூல் காங்கிரஸின் மாவட்ட நிர்வாகி்கள் சிலர், கட்சியின் தொடக்க விழாவையொட்டி ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கொல்கத்தா அருகே பாங்கூர் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூடவே நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அரைகுறை மற்றும் அப்பட்டமாக உடல் உறுப்புகள் தெரியும்படியான உடையில் பெண்கள் கலந்து கொண்டு ஆடிப் பாடினர்.
அவர்களுடன் சேர்ந்து தலைவர்களும், நிர்வாகிகளும் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பலர் கரன்சி நோட்டுக்களை அப்பெண்கள் மீது வீசி எறிந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாடே டெல்லி பாலியல் பலாத்காரச் செயலால் பெரும் சோகத்திலும், வருத்தத்திலும், விரக்தியிலும், வேதனையிலும் இருக்கும் நிலையில் திரினமூல் காங்கிரஸார், இப்படி பெண்களை ஆட விட்டு, அவர்கள் மீது கரன்சி நோட்டுக்களை வீசி மகிழ்ந்த செயல் மேற்கு வங்க மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications