பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட சசி தரூர் கோரிக்கை
அவரது இந்தக் கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஐபிசி 228 ஏ பிரிவின்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பெயர், விவரங்களை வெளியிட முடியாது. யாராவது அதை வெளியிட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்கும். இந்த நிலையில் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏன் டெல்லி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஏன் அவரது பெயரை வெளியிட்டு அவரை கெளரவப்படுத்தக் கூடாது என்று கேட்க விரும்புகிறேன்.
மேலும், அவரது பெற்றோருக்கு ஆட்சேபனை இல்லை என்றால், புதிதாக உருவாக்கப்படும் பாலியல் பலாத்கார தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி அவரைக் கெளரவப்படுத்த வேண்டும்.
அப்பெண் ஒரு எல்லோரையும் போல ஒரு மனுஷிதான். அவருக்கும் ஒரு பெயர் உள்ளது. அவரை உரிய முறையில் கெளவரமாக நடத்துவதே நல்லது என்று கூறியுள்ளார் தரூர்.
தரூரின் கருத்தை பலர் வரவேற்றுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.