சென்னையில் ஜெமினி சர்க்கஸ்... ஓ.பி.எஸ். போட்ட ஒரே போடு!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தலைவர்கள் எல்லாம் பேசியதைக் கேட்டால் புல்லரிக்கிறது. அந்த அளவுக்கு கட்சிப் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதாவின் மனம் குளிரும் வகையில் அமர்க்களமாக பேசியுள்ளனர் தலைவர்கள்.
பேசியவர்களில் அம்மாவின் மனதை அதிகம் கவர்ந்தவர்களாக ஓ.பன்னீர் செல்வம், சமீபத்தில் அதிமுகவில் வந்து சேர்ந்த நாஞ்சில் சம்பத் ஆகியோரைத்தான் சொல்லலாம். அந்த அளவுக்கு பேச்சில் அசத்தி விட்டனர்.
பா. வளர்மதியின் பேச்சில் விஜயகாந்த் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார். விஜயகாந்த்தை, அஃறினையில் போட்டுத் தாளித்து விட்டார் வளர்மதி. அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்து சில சொட்டுக்களை எடுத்து காதில் விடுகிறோம்...
ஓ.பன்னீர்செல்வத்தின் ஓஹோ பேச்சு
நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அரசியலில் சிலர் நாணயம் இல்லாமல் இருக்கிறார்கள். செல்லு நாணயம்தான் அம்மா. செல்லாத நாணயம் கருணாநிதி. சென்னையில் ஜெமினி சர்க்கஸ் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் வரும் கோமாளியை விட கருணாநிதி பெரிய கோமாளியாக இருக்கிறார். செல்லாத நாணயத்தோடு கறுப்பான நாணயம் கூட்டுசேரப் போகிறதாம். தேர்தலில் அந்தக் கூட்டணி சந்தி சிரிக்கப்போகிறது.
அவங்களுக்கு மக்கள் மணி அடிப்பார்கள்
தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் அம்மா பேசியபோது மணி அடித்து அவமானப்படுத்தி விட்டனர். அடுத்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தை அம்மா தலைமை ஏற்று நடத்துவார். அதற்கான காலம் வருகிறது. மக்கள் அவர்களுக்கு மணி அடிப்பார்கள்.
அம்மா வந்தால்தான் தாய் நாடு
இந்தியாவின் தலைமையை யார் ஆளப்போகிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். இந்தியாவைத் தாய்நாடு என்று சொல்வார்கள். அம்மா தலைமையேற்ற பிறகுதான் உண்மையிலேயே இந்தியா நம் தாய்நாடாகும்.
கையிருப்பு 118 கோடி
நம்மோடு கூட்டணிவைத்த ஒருவர், இப்போது செல்லாத காசான தீயச் சக்தியோடு கூட்டணி வைத்துக்கொண்டு நடுத்தெருவுக்கு வரப் போகிறார். அதிமுகவின் வங்கிக் கணக்கில் இப்போது டெபாஸிட்டாக இருப்பது 118 கோடி. அதற்கு வட்டியே 9 கோடி வருகிறது
எத்தனை முறை சுட்டாலும் .. நாஞ்சில் சம்பத்தின் தங்கப் பேச்சு
எத்தனை முறை சுட்டாலும் தகதகவென மின்னும் தங்கத்தைப்போல் தகத் தகாயத் தலைவியாக அரசியலில் அம்மா வீற்றிருக்கிறார். தலை கவிழாத தஞ்சை கோபுரம் அம்மா. டெல்லியிலும் அம்மாவின் ஆதிக்கத்தைச் செலுத்துவோம். அதற்காக வில்லை எடுப்போம். கணையைத் தொடுப்போம். வெற்றியைப் பறிப்போம். வரலாற்று அதிசயத்தை நிகழ்த்த ஆயத்தமாவோம்.
யசோதை வானத்தைப் பார்த்து...
யசோதை வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் அருகே கண்ணன் படுத்திருக்கிறான். அப்போது யசோதை நிலாவைப் பார்த்து "உன்னைச் சுற்றி ஒளியும் ஒளிவட்டமும் இருக்கிறது என்று கர்வப்படாதே. அதைவிடவும் ஒளி வீசும்படி எங்கள் கண்ணனின் திருமுகம் இருக்கிறது' என்றாள். அதேபோல் கடும் புயலுக்கு மத்தியிலும் சோதனைகளுக்கு மத்தியிலும் பிரகாசிக்கிறார் அம்மா.
செம்மலையின் இதயம் தொட்ட பேச்சு
டெல்லிக்கு நான் போகும் போதேல்லாம் அங்குள்ளவர்கள் அம்மாவைப் பற்றித்தான் விசாரிப்பார்கள். அவர்களிடம் நான்..அம்மா மூளையால் மட்டுமே முடிவுகளை எடுப்பவர் இல்லை. அவர் இதயத்தாலும் முடிவுகள் எடுப்பவர்' என்று சொல்வேன்.
அவருக்கு அவரே பாராட்டு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அல்லும் பகலும் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்து, அதை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று செம்மலை தீர்மானத்தைப் படித்தபோது ஜெயலலிதாவே உற்சாகமாகி கைதட்டினார்.
காட்டெருமைன்னு நினைச்சா...
பா. வளர்மதி பேசுகையில், அந்தக் காட்டெருமைக்குக் கடிவாளம்போட்டு அம்மாதான் நாட்டுக்கு இழுத்து வந்தார். இப்பதான் தெரியுது அது பன்றின்னு என்று பேசியபோது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.