மதக் கலவரத்தை தூண்டும் பேச்சு: எம்.எல்.ஏ. ஒவைசி மீது வழக்குப் பதிவு

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்.
இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காஷிம்ஷெட்டி கருணாசாகர் என்பவர் கடந்த மாதம் 28ம் தேதி தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஹைதராபாத்தில் உள்ள சந்திராயன்குட்டா தொகுதி எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி இந்து மதத்தை அவமதித்தும், இந்து, முஸ்லிம்களுக்கு இடையே மதக் கலவரத்தை தூண்டிவிடும் வகையிலும் பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று அம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திலேயே ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், சிகிச்சைக்காக என்று கூறிக் கொண்டு அக்பருத்தீன் லண்டனுக்கு ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அக்பருத்தீன் ஒவைசி ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாதுத்தீன் ஒவைசியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications