தெலுங்கானா தனி மாநிலம்-ராகுல் முடிவுக்குக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ் கட்சி அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனி மாநிலம் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் தெலுங்கானா தனி மாநிலம் அமையவில்லை. அந்த மாநிலம் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதற்குள் தெலுங்கானா பகுதி காங்கிரஸாரும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
தெலுங்கானா தனிமாநிலம் அமைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்தே போய்விடும் என்று எச்சரித்து கட்சி மேலிடத்துடன் மோதி வருகின்றனர். இவர்களின் அழுத்தங்களுக்காகவே காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ரொம்பவும் தீவிரமாகவே யோசித்து வருகிறது.
தனித் தெலுங்கானா என்ற மாநிலத்துக்கு மாற்றாக சிறப்பு நிதி உதவி திட்டத்தையோ அல்லது சிறப்பு அந்தஸ்தையோ அளித்து சமாளிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. இதனால் தற்போது இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாக கருதப்படுகிற ராகுல்காந்தி இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதற்காகவே சோனியா காந்தி காத்திருக்கிறாராம். ராகுல் காந்தியும் இதற்கேற்ப மிகவும் தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
அனேகமாக ராகுல் காந்தி தமது முடிவை சோனியாவிடம் தெரிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்க்கள் தெரிவிக்கின்றன.
அநேகமா தேர்தலுக்குள் தனித் தெலுங்கானாவை கொள்கை அளவில் அறிவிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications