டெல்லி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகளின் வக்கீலை 'கெரோ' செய்த வக்கீல்கள்
டெல்லி: டெல்லி கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக வாதாட முன்வந்த வழக்கறிஞரை பிற வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் யாரும் ஆஜராகக் கூடாது என்று வழக்கறிஞர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட விரும்புவதாக வழக்கறிஞர் மோகன் லால் ஷர்மா இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றவாளிகளில் சில பேரின் உறவினர்கள் தனக்கு போன் செய்து அவர்களுக்கு ஆதரவாக வாதாடுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வாலிடம் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவது தொடர்பான ஆவணத்தில் அவர்களிடம் கையெழுத்து வாங்க முடியவில்லை. அதனால் திகார் சிறைக்கு சென்று குற்றவாளிகளிடம் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே மோகன் லால் ஷர்மாவை பிற வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அவருடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஷர்மாவின் வேண்டுகோளை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்த பிறகும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட 2 வழக்கறிஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மூடப்பட்ட அறையில் நடத்தவும், அதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றத்தில் செய்தியாளர்களும், வழக்கறிஞர்களும் நிரம்பி வழிந்ததால் குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications