அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - எதிர்த்து தீக்குளித்த திருப்பூர் தொழிலதிபர் மரணம்
பல்லடம்: நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக்கோரியும், டெல்லி பாலியல் பலாத்காரக் கொடுமையைக் கண்டித்தும் தீக்குளித்த பல்லடம் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோட்டில் முன்சீப் கோர்ட் உள்ளது. ஜனவ ரி 4-ம் தேதி இங்கு மண்எண்ணையால் நனைந்த லுங்கியுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அங்கு கூடியிருந்த அனைவரையும் கும்பிட்ட அவர் தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்,வக்கீல்கள், போலீஸார் உடனடியாக அவர் மீது பற்றிய தீயை அணைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு விசாரணையில் அவரது பெயர் ராஜு என்றும், பல்லடம் பணப்பாளையத்தைச் சேர்ந்த பணியன் நிறுவன அதிபர் என்றும் தெரிய வந்தது.
உடலில் பலத்த தீக்காயத்துடன் பல்லடம் அரசு மருத்துவமனையிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.