ஈரோட்டில் பாதிரியார்கள் ஓட்டிப்பழகிய ஜீப் மோதி 10ம் வகுப்பு மாணவி பலி: பதட்டம், போலீசார் குவிப்பு
ஈரோடு: ஈரோட்டில் பாதிரியார்கள் ஓட்டிப் பழகிய ஜீப் மோதி பத்தாம் வகுப்பு மாணவி பலியானார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது மலைப்பகுதியான தாளவாடி. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று டிவைன் என்னும் தனியார் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் குமிட்டாபுரத்தைச் சேர்ந்த சந்தியா(15), சுஷ்மா(15).
அந்த பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர்கள் பாதிரியார்கள் டேவிட், லூர்துராஜ். அவர்கள் 2 பேரும் நேற்று மாலை டிவைன் பள்ளி மைதானத்தில் ஜீப் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து வந்த சந்தியா மற்றும் சுஷ்மா மீது அவர்களின் ஜீப் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்களை தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சந்தியா வழியிலேயே இறந்தார். இடுப்பில் படுகாயமடைந்துள்ள சுஷ்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 தமிழக அரசு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் இருந்த சிலரே பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் பள்ளி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தையும் சிலர் சேதப்படுத்தினர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications