ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைப்பு: இலவச வேட்டி, சேலைகள் எரிந்து சாம்பல்
நெல்லை: ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் பொங்கலுக்கு ஏழைகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 350 வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகின.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது தனக்கர்குளம் பஞ்சாயத்து. அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் தீ வைத்துவி்டடனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து புகை வெளியே வந்தது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாத பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவி விஜயலட்சுமிக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 350 வேட்டி, சேலைகள், முக்கிய ஆவணங்கள், நாற்காலிகள், டேபிள், பீரோ உட்பட தளவாட சாமான்களும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவி விஜயலட்சுமி ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி வழக்குப் பதிவு செய்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றார். இச்சம்பவம் ராதாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications