மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை: நோட்டீஸ் வாங்க மறுப்பு … ராமதாஸ் வீட்டு கதவில் ஒட்டப்பட்டது
மதுரை: மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் அனுப்பிய நோட்டீஸை பெற பாமக நிறுவனர் ராமதாஸின் குடும்பத்தினர் மறுத்ததை தொடர்ந்து,வீட்டுக் கதவில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மதுரையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற சமுதாய அமைப்பு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து பொது அமைதி கருதி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை டாக்டர் ராமதாஸ் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஷ்ரா தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு இ-மெயில் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீசை டாக்டர் ராமதாசிடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் வானூர் தாசில்தார் குமாரபாலன், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், உள்ளிட்டோர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றனர்.
அப்போது டாக்டர் ராமதாஸ் வீட்டில் இல்லை. அவர் பொங்கல் விழாவுக்காக மலேஷியா சென்றுள்ளதாக கூறி, நோட்டீசை வாங்க அவர் வீட்டில் இருந்த அனைவரும் மறுத்தனர். இதனையடுத்து அவரது வீட்டு கதவின் வெளிப்புறத்தில் மதுரை மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைவதற்கான தடை உத்தரவு நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். பின்னர் அதனை போட்டோ எடுத்துக்கொண்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆனால் கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை உடனே வீட்டில் இருந்தவர்கள் கிழித்தெறிந்தனர்.












Click it and Unblock the Notifications