மதுரையில் அதிகாலையில் துணிகரம்: கேரள நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை
மதுரை: மதுரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கேரளா நகை வியாபாரிகள் வைத்திருந்த 4 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் பகுதியை சேர்ந்த ஜெபுரபேல் (வயது41), வினோத்குமார்(32). ஆகிய 2 பேரும் இன்று காலை 5.30 மணி அளவில் கேரளாவில் இருந்து ஒரு ஆம்னி பஸ்சில் மதுரை வந்தனர். அவர்கள் இருவரும் பெரிய பையில் நகைகளை சுமந்தபடி டி.பி.கே. ரோட்டில் இருந்து தங்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சுண்ணாம்புக்காரத் தெரு பகுதியில் நடந்து சென்ற போது ஆட்டோக்குள் இருந்த 4 பேர் திடீரென ஜெபுரபேல், வினோத்குமார் ஆகியோரின் கண்களிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவர்களை தாக்கினர். இந்த திடீர் தாக்குதலால் ஜெபுரபேல், வினோத்குமார் ஆகிய 2 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்த நகை பைகளை பறித்துக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் ஓடிவிட்டது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த அம்பாசிடர் காரில் 4 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
நகைகளை பறி கொடுத்த 2 பேரும் கதறி அழுதனர். அஅலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடி யாக திரண்டனர். இதுபற்றி திடீர்நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மர்மக் கும்பல் பறித்து சென்ற 2 பைகளில் 4 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. இந்த நகைகள் அனைத்தும் மதுரையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டவை ஆகும். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதொடர்பாக திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகையை பறிகொடுத்த இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக கேரளாவில் இருந்து தங்க நகைகள் செய்து மதுரை நகைக் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் மதுரை வாணியன்கிணற்று சந்து பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்தும் தங்கி வருகிறார்கள். இவர்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் நபர்கள்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளை சம்பவத்தை அடுத்து மதுரை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பல் மதுரை நகருக்குள் ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கி இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இன்று காலையில் நடந்த கொள்ளைச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications