இரும்புக் கம்பியால் மனைவி தொடையில் சூடு வைத்த கணவர் கைது.. மாமியார் ஓட்டம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கட்டிய மனைவி என்றும் பாராமல், தொடையில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூரக் கணவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொடும் செயலுக்கு உடந்தையாக இருந்த மாமியார் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி, நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். 29 வயதான இவர் தொழிலாளி. இவருக்கும் செல்வி என்ற 27 வயதுப் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் கண்ணனும் அவரது தாயார் ஜெயலட்சுமியும் சேர்ந்து செல்வியை வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் இரும்புக் கம்பியை பழுக்க காய்ச்சி, அதை தனது மனைவியின் தொடையில் வைத்து சூடு போட்டு மிருகம் போல நடந்து கொண்டார். இதைத் தட்டிக் கேட்காமல் பார்த்து ரசித்துள்ளார் மாமியார்.
படுகாயமடைந்த செல்வியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்ணனைக் கைது செய்தனர். மாமியார் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.