திரவ வெடிகுண்டு- பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள்: வலுவாகும் மாவோயிஸ்டுகள்?
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரிசர்வ் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான அண்மைய மோதல் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேகர் மாவட்டத்தின் கடிலா அருகே அமுஅதிகார் என்ற கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆண்டின் முதலாவது மிகப் பெரிய நடவடிக்கையாக இது கருதப்பட்டது. அப்போது 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 ரிசர்வ் படையினர் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தரப்பில் 8 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் மூவரது உடலின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. மூவரது உடல்களும் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்ட போது வயிற்றுக்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தையல்கள் பிரிக்கப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டதில் ஒரு வீரரின் உடலில் 'திரவ' நிலை வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. மற்ற இருவரது உடலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் திரவ வகை வெடிகுண்டு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வெடிக்கும் தன்மை வாய்ந்தது. இந்த திரவ வகை டெட்டனேட்டர் வெடிக்கும் போது மற்ற வெடிகுண்டுகளின் இழப்பை விட மிகப் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக மாவோயிஸ்டுகளின் ஒடிஷா முகாம்களில் இருந்து இப்படியான திரவ வகை வெடிகுண்டுகள் பேரல் பேரலாக கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் அவற்றை பயன்படுத்தவும் மாவோயிஸ்டுகள் முனைந்திருப்பது அதிர வைக்கக் கூடியதாக இருக்கிறது.
இத்துடன் முதல் முறையாக பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள், ஆயுதங்களும் மாவோயிஸ்டு முகாம்களிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளிடம் கைப்பற்றப்பட்டிருந்தது. இவை வடகிழக்கு மாநில தீவிரவாத இயக்கங்கள் மூலமாக மாவோயிஸ்டுகளுக்கு கிடைத்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு நிலை மோசமடைந்து வரும் நிலையில் மாவோயிஸ்டுகளுக்கான பாகிஸ்தானின் ஆயுத சப்ளை விவகாரமும் பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications