ஜார்க்கண்டில் பயங்கரம்: சிபிஆர்எப் வீரரின் வயிற்றில் வெடிகுண்டு வைத்த மாவோயிஸ்டுகள்
லடேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலரின் உடலில் ரசாயன வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை ஜார்க்கண்டின் லடேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மொத்தம் 12 காவலர்கள் உயிரிழந்தனர். அதில் 5 பேரின் உடலை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பிறகு கிடைத்த உடலை நேற்றிரவு பிரேதப் பரிசோதனை செய்ய எடுத்துச் சென்றனர். அப்போது வயிற்றுப் பகுதி வெட்டி தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவற்றை ஸ்கேன் செய்து பார்த்ததபோது, அதன் வயிற்றுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பொருள் ஒரு திரவநிலை வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர். பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதுபோன்ற வெடிகுண்டு, இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. உயிர்ப்பலியை அதிகரிப்பதற்காக, இறந்துபோன வீரர்களின் உடலில் வெடிகுண்டுகளை வைத்து அனுப்புவது மாவோயிஸ்டுகளின் மிகப் பழமையான உத்தியாகும். நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்த இந்த கொடிய முறையை அவர்கள், தற்போது மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications