போச்சு... மறுபடியும் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு-இந்த முறை நெல்லையில்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் கடந்த 6-8-2012 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு வக்கீல் முத்துக் கருப்பன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், தமிழக முதல்வரை அவதூறாக பேசிய விஜயகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 500-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ராஜசேகரன் விஜயகாந்த்துக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இது 5வது வழக்கு
விஜயகாந்த் மீது தொடரப்படும் 5வது அவதூறு வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி திண்டுக்கலிலும், அதே மாதம் 26ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்திலும் மற்றும் அதே மாதம் 30ம் தேதி விழுப்புரத்திலும் பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக தாக்கிப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த 3 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என்று தனித்தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி வழக்குகளும் தொடரப்பட்டன. அதேபோல மேலும் ஒரு வழக்கும் அவர் மீது பாய்ந்தது.
அரசாணைக்குத் தடை
இதற்கிடையே, விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் மீது, தமிழக அரசை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குக்குத் தடை விதிக்கவும், அரசு ஆணையை ரத்து செய்யவும் கோரி விஜயகாந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசு ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், அவதூறு வழக்குக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.