முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்த மலேசியாவில் தடை
கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்களுக்கு மட்டுமே ஆன புனிதமான சொல் ஆகிய "அல்லா" என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று செலாங்கர் மாநில இஸ்லாமிய விவகாரங்கள் கவுன்சில் செயலர் முகமது மிஸ்ரி இத்ரிஸ் கூறியுள்ளார்.
‘அல்லா' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது என்று கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியே கெசட்டில் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் முஸ்லிம் அல்லாதவர்கள் யாரும் அல்லா என்ற சொல்லை செலாங்கரில் பயன்படுத்த கூடாது என்று சுல்தான் (ஷராபுதீன் இத்ரிஸ் ஷா) அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான் எச்சரித்துள்ளார் என்றும் முகமது மிஸ்ரி கூறினார்.
இந்த நிலையில் மலேசியாவின் எதிர்க்கட்சியான பிஏஎஸ், "முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தாத வரை, அல்லா என்ற சொல்லை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்"' என்று கூறியுள்ளது.
அதேபோல் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி(டிஏபி)யின் பொதுச் செயலாளர் புத்தாண்டு நிகழ்ச்சியின் போது பேசுகையில், "'அல்லா என்று பைபிளில் கூறியுள்ளபடி மலேசிய மொழியில் பயன்படுத்த மலேசிய அரசு அனுமதிக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் மலேசியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் கூறுகையில், "'பல நூற்றாண்டுகளாக மலேயா மொழி பைபிளில் இடம்பெற்றுள்ள அல்லா என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். இப்போது தடை விதிப்பது சரியல்ல. இந்த அடிப்படை உரிமைக்கு எல்லா அரசியல் கட்சியினரும் மதிப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications