பொங்கல் வைக்க காசு இல்லை: கடலை வியாபாரி ராமலிங்கம் புலம்பல்
திருப்பூர்: பொங்கல் வைக்க காசு இல்லை என ரூ. 28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த கடலை வியாபாரியான ராமலிங்கம் வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசிக்கும் கடலை வியாபாரி ராமலிங்கம் என்பவரது வீட்டில் கடந்த டிசம்பர் 31ம் தேதி திடீர் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர் ரூ. 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்களை பறிமுதல் செய்தனர். இவ்வளவு பெரியத் தொகைக்கான கடன் பத்திரங்கள் கடலை வியாபாரி ஒருவருக்கு கிடைத்தது எப்படி என அவரை நேரில் அழைத்து வருமானவரித்துறை விசாரணை நடத்தியது.
இந்த பத்திரங்களின் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடன் பத்திரங்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனை லண்டனைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது. கடன் பத்திரங்களை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து ராமலிங்கம் மோசடி செய்திருப்பதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ராமலிங்கத்திடம் மீண்டும் வருமானவரித்துறை விசாரணை நடத்த உள்ளது.
இந்த நிலையில், எங்கள் குல வழக்கப்படி பொங்கல் அன்று வீட்டில் தங்கம், வெள்ளி வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம். இப்போது எங்கள் வங்கி கணக்கு அனைத்தையும் முடக்கிவிட்டார்கள். வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அதனால், பொங்கல் பானை வாங்க கூட காசு இல்லை என அவரை சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் மீடியாக்களிடம் புலம்பி வருகின்றாராம் கடலை ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications