குமரி-வாஸ்கோடகாமா (கோவா) வழி தடத்தில் தினசரி ரயில் இயக்க கோரிக்கை

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கட்டுமான தொழிலுக்காகவும், மீன்பிடி தொழிலுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கொங்கன் கடற்கரை மார்க்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சொர்னூர், கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணூர், காசரகோடு, மங்களூர், உடுப்பி, கார்வார் மற்றும் கோவா போன்ற பகுதிகளுக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.
கொங்கன் கடற்கரை மார்க்கம் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மீக தளங்களான கூர்க், தாகூசாகர் அருவி, ஜோக் அருவி, கொல்லூர் மூகாம்பிகா கோவில், உடுப்பி கோவில், மங்களாதேவி கோவில், கோகர்ணா, கும்பசரி, தர்மஸ்தலா போன்ற இடங்களுக்கு செல்ல தினசரி ரயில் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதே போன்று உலக புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளைக் கொண்ட கோவாவையும் தென்கோடி முனையான கன்னியாகுமரியையும் இணைப்பதற்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. கிறிஸ்தவர்களின் முக்கிய புனித இடங்களில் கோவாவும் ஒன்று. இங்கு புனிதர் பிரான்சிஸ் சேவியரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலிருந்து அதிகப்படியான கிறிஸ்தவர்கள் கோவாவிற்கு சென்று வருகின்றனர். இவர்கள் தினசரி ரயில் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இதுவரை எந்த ஒரு தினசரி ரயிலும் கொங்கன் வழி தடத்தில் இல்லை. தற்போது இயக்கப்படும் ரயில்களான நாகர்கோவில்-காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி-ஹாப்பா வாரம் இருநாள் ரயில்கள் குஜராத் மாநிலம் வரை செல்லும் நெடுந்தூர ரயிலாக இருப்பதால் குறைந்த தூரம் வரை செல்லும் பயணிகளுக்கு போதிய முன்பதிவு இருக்கைகள் கிடைக்காத நிலை உள்ளது.
மங்களூர்-நாகர்கோவில் இடையே ஓடிக் கொண்டிருக்கும் எர்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மங்களுர் போய் சேருகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரிலிருந்து காலை 7.10 மணிக்கு புறபட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருகிறது. நடு இரவில் நாகர்கோவிலுக்கு ரயில் வந்தால் அதில் வருகின்ற பயணிகள் பாதுகாப்பாக தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்வதற்கு அச்சமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கேட்டது மங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை, கிடைத்ததோ கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படாத வகையில் பகலும் இல்லாத இரவும் இல்லாத இரண்டும் கெட்டான் ரயில் சேவை. நள்ளிரவு நேரங்களில் இயங்குவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை.
நாகர்கோவில்-மங்களூர் எர்நாடு ரயிலின் நேரத்தை மாற்றி அனைத்து விதமான சுற்றுலா பயணிகளின் வசதியின் பொருட்டு ஒரு மார்க்கத்தை வாஸ்கோடகாமா (கோவா) வரை நீட்டிப்பு செய்து மறுமார்க்கத்தை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி-வாஸ்கோடகாமா (கோவா) எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டும் என்பது ஆகும்.
குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் இரணியல், குழித்துறை, பாறசாலை ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்லபட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே, இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று சம்பந்தப்பட்ட ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications