பாகிஸ்தானின் அட்டூழியம் அதிகரிக்க காங்கிரஸின் அலட்சியமே காரணம்: ராம. கோபாலன்
சென்னை: பாகிஸ்தானின் அட்டூழியங்கள் அதிகரிக்க காங்கிரஸின் அலட்சியம் தான் காரணம் என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் தோன்றிய நாளிலிருந்து அன்றாடம் தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சிறுபான்மை ஓட்டுக்களை அள்ளிக்கொள்வதற்காக பாகிஸ்தானின் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளது. இதனால் துணிச்சல் பெற்ற பாகிஸ்தான் அரசு அடாவடி செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இதன் உச்ச கட்டமாக ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது. பாரதீய ஜனதா தவிர வேறு எவரும் இதனால் ஆத்திரமோ, ஆவேசமோ அடைந்ததாக தெரியவில்லை. ஜ.நா.சபை வகுத்துள்ள நெறிமுறைகள் படி பார்த்தால் இந்தச்செயல் காட்டுமிராண்டித்தனமானது. இத்தகைய செயல்களை கண்டிப்பதற்காக காவல் துறையிடம் அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது.
ராணுவத்தினர் பலர் இதனை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி நம்மை வெட்கத்தால் தலைகுனிய வைத்துள்ளது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி மக்கள் சக்தியை உருவாக்க வேண்டிய காலகட்டம் இது. ஜ.நா.சபை பாகிஸ்தானை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வைக்க வேண்டும் என மத்திய அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஜப்பான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய தீவில், அத்துமீறி நுழைய முயன்ற சீன விமானத்தை சுட்டு வீழ்த்த ஜப்பான் உத்தரவிட்டது. இந்த தகவல் அறிந்த சீன அரசு உடனடியாக விமானத்தை வாபஸ் பெற்றது. அப்படிப்பட்ட துணிச்சலுடன் மத்திய அரசும், மக்களும் செயல்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications