கருகும் சம்பா பயிரைக் காக்க 12 டி.எம்.சி. நீர் உடனடி தேவை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

காவிரி நதிநீர் வழக்கு இம்மாதத்தின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை இம்மாத அரசிதழில் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கவும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இரு மாநில தண்ணீர் தேவையை முடிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் 18 டி.எம்.சி. நீர் கோரப்பட்டது. ஆனால் கண்காணிப்புக் குழு கையை விரித்து தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட முடியாது என்று கண்காணிப்பு குழு கூறியுள்ளது. தற்போது கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக 12 டி.எம்.சி. நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications