தர்மபுரியில் நடந்ததைப் போல பண்ருட்டி அருகே தலித் கிராமத்திலும் கொலை வெறி தாக்குதல்!
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராம மக்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமத்தில் காணும் பொங்கல் நாளான நேற்று தலித் மக்கள் மீது சாதிவெறிபிடித்த ஒரு வன்முறைக்கும்பல் திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
தருமபுரியில் நடத்தியதைப் போலவே தலித் மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி, சொத்துக்களைச் சூறையாடி, கொள்ளையடித்த பின்னர், அக்கும்பல் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட குடிசைகள் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளன. ஏராளமான ஓடு வேய்ந்த வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதால் முற்றிலும் சிதைந்துள்ளன.
சாதிவெறியர்களின் இத்தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சாதிவெறியர்கள் சிலர் குடிபோதையில் போவோர் வருவோரிடம் வம்பிழுத்துள்ளனர். அவர்களை எதிர்த்துப் பேசிய தலித் இளைஞர்களை அந்த வன்முறைக் கும்பல், சாதிப் பெயரைச்சொல்லி இழிவாகப் பேசியதுடன் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
அத்துடன் நில்லாமல் ஒட்டுமொத்த சாதி வெறியர்களையும் திரட்டிக்கொண்டு தலித் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து கொடூரமான முறையில் சாதி வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இரு தரப்பிலும் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைத் தாக்குவது, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இதற்கு சாதி சங்கத்தைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் கட்சி ஒன்றே காரணம் என்று தெரியவருகிறது. இந்த தாக்குதலும் தருமபுரியை போலவே திட்டமிட்டு நடத்தப்பட்டள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இவ்வாறான சாதி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். சாதியவாதிகளின் இந்த சமூக விரோதப் போக்கை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சாதிவெறியாட்டத்தின் பின்ணியில் உள்ள அனைவரின் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் வடமாவட்டங்களில் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மென்றும் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் தலித் மக்களின் குடியிருப்பையொட்டி அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும் உரிய இழப்பீடுகளை வழங்கவும் ஆவண செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications