பிரதமரை கைது செய்ய முடியாது: பாக். சுப்ரீம் கோர்ட்- அரசு இடையே மோதல் வெடித்தது!
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற உத்த்ரவுப்படி பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய முடியாது என்று அரசின் ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் அஷ்ரப் மற்றும் 15 பேரை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 24 மணிநேரத்தில் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, வானமே இடிந்து விழுந்தாலும் ஊழல் வழக்கின் விசாரணை தொடரும் என்றும் காட்டமாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்தும் பிரதமர் கைது செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது பிரதமர் உள்ளிட்டோரை ஏன் கைது செய்யவில்லை என்று அரசுத் தரப்பை நோக்கி தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பாகிஸ்தான் அரசின் ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் போகாரி, பிரதமரை கைது செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் கைது செய்யவில்லை என்றார்.
இதைக் கண்டித்த தலைமை நீதிபதி, இந்த நாட்டில் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று காட்டம் காடினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விசாரணை அமைப்புக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications