நாகர்கோவிலில் நகைக்கடை பூட்டை உடைத்து 2 கிலோ தங்கம் கொள்ளை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நகைக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கல்மட தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். அவர் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். கடையை அவரது மனைவி செல்வி நிர்வாகித்து வருகிறார். நேற்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் சிலர் நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் மற்றும் கிரில் கேட் திறந்துகிடந்ததைப் பார்த்தனர்.
இது பற்றி உடனடியாக நாராயணனுக்கு தகவல் தெரிவித்தனர். நாராயணன், செல்வி மற்றும் உறவினர்கள் பதறியடித்து கடைக்கு வந்தனர். கடையை திறந்து பார்த்தபோது கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கோட்டாரு காவல் நிலையத்துக்கு தகவல தெரிவித்தனர். டவுன் டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, சுடலைமுத்து, ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மோப்ப நாய் ஓரா கொள்ளை நடந்த கடையில் இருந்து அருகில் உள்ள கட்டபொம்மன் சந்திப்பு வரை சென்று திரும்பியது. கடையில் இருந்து மொத்தம் 2 கிலோ தங்க நகைகள் மற்றும் பொருட்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
அவ்வை சண்முகம் சாலை நகைக் கடைகள் நிறைந்த பகுதி. எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். அதிகாலை 4 மணிக்கெல்லாம் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் திறக்கப்பட்ட விடும். அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் நடந்த துணிகர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications