தனித் தெலுங்கானாவை உருவாக்காவிட்டால் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: சர்வே

ஒரு தனியார் ஏஜென்சி மூலம் இந்த சர்வே நடத்தி மக்களின் மன நிலையை தனக்குத் தெரிவிக்குமாறு மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட சர்வேயில் தனித் தெலுங்கானாவுக்கு மாபெரும் ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் 294 சட்டமன்றத் தொகுதிகளும், 42 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில் தெலுங்கான பகுதிகளில் மட்டும் 119 சட்டமன்றத் தொகுதிகளும் 14 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.
தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியுடன் இணைந்து 80 சட்டமன்றத் தொகுதிகளையும், 14 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரசால் வெல்ல முடியும். இல்லாவிட்டால், இங்கு 'முட்டை' தான் கிடைக்கும் என்று அந்த சர்வே முடிவு தெரிவித்துள்ளது.
மேலும் தனித் தெலுங்கானாவை உருவாக்கிவிட்டாலும் கூட காங்கிரஸ் தனித்து நின்றால் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்றும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை காங்கிரசுடன் இணைத்தால் அல்லது கூட்டணி அமைத்தால் தான் பெரிய வெற்றி சாத்தியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே நின்றால், இருவருக்கும் சரிவே ஏற்படும் என்றும் சர்வே தெரிவித்துள்ளது.
அதே போல ஆரம்பத்தில் தெலுங்கானா விஷயத்தில் மாறி மாறிப் பேசி வந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இப்போது வேறு வழியின்றி தனித் தெலுங்கானாவை ஆதரிப்பதாகக் கூறிவிட்டதால், அவரது கட்சிக்கும் இந்தப் பகுதியில் கொஞ்சம் வெற்றி கிடைக்கும் என்கிறது சர்வே.
அதே நேரத்தில் தெலுங்கானாவை ஆதரிக்கும் பாஜகவுக்கு இதனால் பெரிய லாபம் கிடைக்காது என்றும், தனித் தெலுக்கானாவை உருவாக்க உதவும் கட்சிக்கே லாபம் அதிகமாக இருக்கும் என்றும் சர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியில் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் அதிக லாபம் கிடைக்கலாம் என்கிறது சர்வே.
ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கிய காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்திற்கு முன்பே இந்த சர்வே முடிவு ராகுல் காந்தியிடம் தரப்பட்டுவிட்டது. இதையடுத்து இன்றைய கூட்டத்தில் தெலுங்கானா விவகாரமும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications