காங்கிரசில் முடிசூட்டப்பட்ட ராகுல்தான் இனி தலைவர், பிரதமர் வேட்பாளர்!
டெல்லி: அரசியல் கட்சிகளில் 2013 ஆம் ஆண்டு ‘வாரிசுகளுக்கான முடிசூட்டல்' ஆண்டு போல! திமுகவில் இழுபறியாக இருந்து கொண்டிருந்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின்தான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதேபோல்தான் காங்கிரஸ் கட்சியில் இனி எல்லாமுமே ராகுல்காந்திதான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜீவ்காந்தி மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் மல்லுக்கட்டிப் பார்த்தும் சோனியா கட்சிப் பணிக்கு உடனே வரவில்லை. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு சோனியா காந்தி கட்சியின் தலைவராக மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் பதவிக்கு கூட இரண்டு முறையும் மன்மோகன்சிங்கைதான் நிறுத்தினார் சோனியா! சோனியா தலைவராக வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் தரக்கூடிய ஒருதலைவராக ராகுலைத்தான் ஏக்கத்துடன் காங்கிரஸார் பார்த்து வந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை.

கட்சியை வலுப்படுத்த முயற்சித்த ராகுல்
ராகுல்காந்தி கட்சிப் பணியே தமக்கு முக்கியம் என்று கூறிக் கொண்டு இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தக் கூடிய வேலைகளை செய்தார். இளைஞர் காங்கிரஸை ஒழுங்குபடுத்தியதில் ராகுலின் பங்கு மிகவும் முக்கியமானது.

வாக்கு வங்கியாக மாறியதா...?
அதே நேரத்தில் இந்த ஒழுங்குபடுத்துதல் என்பது வாக்கு வங்கிகளாக மாறுகிறதா? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

தேர்தல்களில் தொடர் தோல்வி
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் என்ற பொறுப்பில் பத்தோடு பத்தாக இருந்து வந்தாலும் ராகுல் காந்தி சட்டசபை தேர்தல்களுக்கு தலைமை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் வலுவான தொண்டர்தளம் இல்லாதநிலையால் ராகுலுக்கு எந்த ஒரு வெற்றியும் சொல்லிக் கொள்ளும்படியாக கிடைத்துவிடவில்லை.

மோடியை எப்படி சமாளிப்பார் ராகுல்
இந்த நிலையில் லோக்சபா தேர்தலை நாடு எதிர்கொள்ள இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றாகிவிட்டாலும் அவர் இல்லாதுபோனாலும் அரைடஜன் பிரதமர் வேட்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் நிலைமை அப்படி இல்லை..

பல கணக்குகளுக்கு ராகுலை பதிலாக அளித்த காங்.
இருமுறை பிரதமர் பதவி வகித்துவிட்ட மன்மோகன்சிங்குக்குப் பதிலாக நிதி அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தை பிரதமராக்கிவிடுவது என்ற முனைப்பில் பன்னாடு நிறுவனங்கள் லாபி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கோ தொடர்ச்சியான உடல்நலக் குறைவு. இப்படியே போனால் நிச்சயம் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கப் போய் அதுவே தோல்விக்கும் காரணமாகிவிடுமோ என்று கணக்குப் போட்டதன் விளைவுதான் காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்டிருப்பது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்!

அடுத்த தலைவரும் அவரே, பிரதமரும் கூட அவரே...
இப்பொழுது காங்கிரஸின் துணைத் தலைவர் என்ற பொறுப்பில் அமரவைக்கப்பட்ட ராகுல்தான் இனி காங்கிரஸின் அடுத்த தலைவர் என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது! அதேபோல் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்றால் ப.சிதம்பரம் உட்பட வேறு எவரது பெயரும் இனி அடிபடப் போவதில்லை.. சாட்சாத் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்!!

கரையேறுமா.. கரையுமா..?
காங்கிரஸ் தலைவர் பதவியுடன் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக உருவெடுத்திருக்கும் ராகுல்காந்தியின் கையில் காங்கிரஸின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸை கரை ஏற்றுவதும் கரைய வைப்பதும் இளவரசர் ராகுலின் கையில்தான் இருக்கிறது!












Click it and Unblock the Notifications