முதல்வர் நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்ய அரசின் திரைப்படப் பிரிவுக்கு லைவ் பேக் கருவி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தொலைக்காட்சிகளுக்கு அனுப்ப நேரடி ஒளிபரப்புக் கருவியை வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், அவைகளை உடனுக்குடன் அனைத்து தொலைக் காட்சிகளுக்கும் அனுப்புவதற்கென, தமிழ்நாடு திரைப்பட பிரிவிற்கு அதிவிரைவாக இயங்கக் கூடியதும் மற்றும் அதிக அளவு நினைவுத் திறனைக் கொண்ட நேரடி ஒளிபரப்பு கருவியை 18 லட்சம் ரூபாய் செலவில் வாங்கவும் முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
காமராசர் இல்லம் புதுப்பிப்பு
நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவிடங்களை நன்முறையில் பராமரிப்பதற்கு அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், காமராசர் நினைவு இல்லத்தை புதுப்பிப்பதற்காக 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் நினைவு இல்லத்தின் நுழைவாயிலில் உள்ள பெயர் பலகை மாற்றுதல், புத்தக அலமாரி அமைத்தல் மற்றும் புதிதாக ஒளிப்பட விளக்கப் பலகைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தேசியக விநாயகம் பிள்ளைக்கு சிலை
தனது கவிதை படைப்புகள் மூலம் தமிழுக்கும், திருவாங்கூர் தமிழ்ப் பகுதிகளை தாய்த் தமிழ்நாட்டோடு இணைவதற்கு பாடுபட்டதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் சிறந்த பணியாற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும். இதனைச் செயல்படுத்தும் வகையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் திருவுருவச் சிலை அமைக்க முதல்வர் ரூ.10.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி
எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தினை, திரைப்படத் துறையில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எம்.ஜி.ஆர் அரசு மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் உள்ள முன்காண் திரையரங்கு நவீன வசதிகள் ஏதுமற்ற பழமையான திரையரங்காக உள்ளது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திரையீடு செய்ய போதுமான வசதிகள் இத்திரையரங்கத்தில் இல்லை. இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் முன்காண் திரையரங்கத்தை 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications