கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு காங். அழைப்பு: நிதிஷ், நவீன் பட்நாயக்குக்கு குறி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் படுவேகத்தில் தயாராகி வருகிறது. அந்தக் கட்சியின் சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படப் போவது நிச்சயமாகிவிட்டது.
தேர்தல் உத்திகளை வகுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 2 நாள் ‘சிந்தனை அமர்வு' கூட்டத்தைத் தொடர்ந்து, நேற்று அங்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரகடனம் வெளியிடப்பட்டது. 13 பக்கங்களை கொண்ட அந்த பிரகடனத்தில் 56 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:
ஆண்டுதோறும் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள்:
காங்கிரஸ் கட்சி மட்டும்தான் அறிவியல், நவீன தொழில்நுட்பம், எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய புதுமை ஏற்படுத்துவதிலும், இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் உறுதிபூண்டுள்ளது. ஆண்டுதோறும் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் கற்கும் ஆர்வம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். அவர்களது முன்னேற்றத்துக்கான சூழல் உருவாக்கப்படும்.
மத சார்பின்மை:
காங்கிரஸ் கட்சி தனது அடித்தளத்தை, இயல்பான ஆதரவாளர்களை அடையாளம் கண்டு வலுப்படுத்தவும், காங்கிரசுடன் உள்ள இந்த பிரிவினரின் ஆதரவை தக்க வைக்கவும், பிரிந்து சென்ற சக்திகளை மீண்டும் கொண்டு வரவும் உறுதி எடுத்துக்கொள்கிறது.
காலாவதியான சித்தாந்தங்கள், எதிர்க்கட்சிகளின் தத்துவங்களை காங்கிரஸ் நிராகரிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி, சமூக நீதிக்கு காங்கிரஸ் மறு உறுதி செய்கிறது.
சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான கொள்கை போரில், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், முற்போக்கு அணியினரும் ஓரணியில் திரள வேண்டும்.
ஏழை எளியோர், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், இதர பிற்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக பாடுபட காங்கிரஸ் மீண்டும் உறுதி கொள்கிறது.
ஊழலுக்கு எதிராக...
அனைத்து மட்டத்திலும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் முன் நின்று தொடர்ந்து போராடும். தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறை சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும். ஊழலுக்கு எதிராக குறிப்பாக அதிகார வர்க்கத்தினரின், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் முன் நின்று போராடும். மக்களுக்கு மானியங்கள் நேரடியாக போய் சேரும் திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் இடைத்தரகர்களை, ஊழலை ஒழிக்க முடியும்.
உறவினர்களுக்கு பதவி இல்லை...
உறவினர்களுக்கு பதவிகளை பெற்றுத் தருவது காங்கிரஸ் அமைப்பில் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஒருவருக்கு தலைவர்கள் சிபாரிசு செய்கிறபோது, ஒரு வேளை அந்த நபர் தோல்வி கண்டால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியை ஒருவர் இரு முறை மட்டுமே தொடர்ந்து வகிக்க கட்டுப்பாடு வேண்டும். ஒரு முறைக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
வேட்பாளர் தேர்வு..
வேட்பாளர்களை முடிவு செய்வதில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொள்வதில்லை. கட்சி விசுவாசம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றில் சமநிலையை பின்பற்ற வேண்டும்.
இளைய தலைமுறையினருக்கு முக்கியத்துவம்:
இளைய தலைமுறையினரின் புதிய எதிர்பார்ப்புகளுக்கு கட்சி பதில் அளிக்க வேண்டும். அவர்களுக்காக நம்பத்தகுந்த கொள்கைகளை, திட்டங்களை இயற்ற வேண்டும். குறிப்பாக வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
சிறுபான்மையினர் உரிமைகள்:
சிறுபான்மையினரின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்பதை காங்கிரஸ் ஒப்பு கொள்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முக்கியமாக கருதப்படுவது மதசார்பின்மை குறித்த பிரகடனமும், பிற கட்சிகளுக்கு கூட்டணியில் சேர் விடுக்கப்பட்டுள்ள அழைப்புமே. பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதை எதிர்ப்பேன் என்று கூறி வரும் அந்தக் கட்சியின் முக்கிய கூட்டணித் தலைவரான பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்தப் பிரகடனம் மூலம் காங்கிரஸ் நேரடியாகவே அழைப்பு விடுத்துள்ளது.
இவரை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், பாஜக பெருமளவில் பலத்தை இழக்கும்.
அதே போல மதசார்பின்மை கொள்கையில் தீவிரமாக உள்ள ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் காங்கிரஸ் குறி வைத்துள்ளது. அவரையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால், தனது கூட்டணி பலம் பெறும் என காங்கிரஸ் கருதுகிறது.
ஆனால், காங்கிரசுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி வைக்க மாட்டேன் என்று நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications