ஊழல் கறையோடு விலகிச் சென்ற கத்காரி.. பாஜக தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கே மீண்டும் அக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக இருக்கும் நிதின் கத்காரி மீண்டும் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் முழு ஆதரவைத் தெரிவித்தது. ஆனால் அத்வானி குரூப் இதை விரும்பவில்லை. சுஷ்மா சுவராஜை தலைவியாக்க அவர் தீவிரமாக முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இதனால் கத்காரி மீண்டும் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசமாகின.
இந்த நிலையில்தான் ஐடி ரெய்டு மூலம் கத்காரிக்கு பெரும் சோதனை நேற்று வந்தது. நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி குழுமத்துடன் தொடர்புடைய மும்பையில் இருக்கும் 9 நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
சோதனை நடைபெற்ற இந்த நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்தவித சொத்துக்களோ அல்லது பரிவர்த்தனைகளோ இல்லாவிட்டாலும், அவற்றின் மூலம் வர்த்தக பரிமாற்றங்கள் நடைபெற்று உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக, ரெய்டு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பூர்த்தி குழும கம்பெனிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் முதலீடு செய்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நிதின் கட்காரிக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால், கட்சிப்பணிகள் காணமாக, தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும், மேலும் கால அவகாசம் அளிக்கும்படியும் கட்காரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி அன்று அவரை நேரில் ஆஜராகும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தனது கட்சித் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் கத்காரி. இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தவறையும் செய்யவில்லை. என்னால் கட்சியின் நலன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே பாஜக தலைவராக மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்தத் திடீர் திருப்பத்தால் பாஜகவினர் ஆச்சரியமடைந்துள்ளனர். இருப்பினும் இதை அவர்கள் எதிர்பார்த்தது போலவே தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த தலைவராக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த பாஜக உயர் மட்டக் கூட்டத்தில் அவரை தலைவராக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் அத்வானி தலைமையில் நடந்தது. ராஜ்நாத் சிங்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்எஸ்எஸ் அனுமதியுடன் அவரைத் தேர்வு செய்துள்ளது பாஜக.
பாஜக தலைவராக இருந்த ஒருவர் (கத்காரி) ஊழல் குற்றச்சாட்டோடு பதவி விலகிச் செல்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications