எட்டாவதாக 18 வயது பெண்ணை திருமணம் செய்து சித்திரவதை... 49 வயது நபர் கைது
காரைக்கால்: மோசடியாக 8 திருமணம் செய்த நபர் 8வது மனைவியை சித்திரவதை செய்து போலீஸில் சிக்கியுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாட்டம் கோட்டுச்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் பி. லட்சுமி. 18 வயதான இவர் காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகார் ஒன்றை அளித்தார்.
அதில், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தான்தோன் துரைசாமி மகன் தான்தோன் பாஸ்கரன் (49). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி நோயால் இறந்துவிட்டதாக கூறி, என்னை 15.11.2012 அன்று திருக்கடையூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
கோட்டுச்சேரி அருகேயுள்ள கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வந்தோம். திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து பாலியல் ரீதியாகவும், பல்வேறு வகைகளிலும் என்னை கொடுமைப்படுத்தி, வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், 20.1.2013 அன்று அங்கிருந்து தப்பித்து, பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
கோட்டுச்சேரி பகுதியில் பாஸ்கரன் குறித்து விசாரித்தபோது, இவர் பல்வேறு பொய்யை கூறி, ஏற்கெனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளதும், அவர்களையும் விரட்டிவிட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து பாஸ்கரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை காரைக்கால் மகளிர் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் பாஸ்கரன் 8 திருமணம் செய்தது உணமை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications