குடியரசு தினத்தன்று டெல்லியில் 4 இடங்களைத் தாக்க லஷ்கர்-இ-தொய்பா திட்டம்?
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 4 இடங்களை குண்டு வைத்து தகர்க்க பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவரவாதி அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்கப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா மிரட்டியது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று அந்த அமைப்பு தெற்கு டெல்லியில் உள்ள கோவில், சாந்தினி சவுக், காந்தி நகர் மார்க்கெட் மற்றும் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய 4 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த தாக்குதல்களை அல் கொய்தா மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது லஷ்கர்-இ-தொய்பா. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தவுள்ள தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்துவிட்டதாகவும், இந்தியன் முஜாஹிதீன் உதவியுடன் வெடிபொருட்கள் டெல்லிக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் திட்டத்தை தவிடுபொடியாக்க டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications