விஸ்வரூபம் மீதான தடையை அகற்றுங்கள் - ராமதாஸ் அறிக்கை

இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர்.
இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.
அதுமட்டுமின்றி விஸ்வரூபம் திரைப்படம் நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.
மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications