தனியர் பங்குகளில் அரசுப் பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

அண்மையில் டீசல் விலையை இரண்டு விதமாக மத்திய அரசு உயர்த்தியது. அரசுப் போக்குவரத்துக்கு கழகங்களுக்கான டீசல் விலையில் 25% உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் எச்சரித்திருக்கிறார்.
மத்திய அரசின் நடவடிக்கையால் போக்குவரத்து கழகங்களில் டீசல் ஒரு லிட்டர் 60 ரூபாய் 95 காசுகள். ஆனால் தனியார் பங்குகளில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய் 54 காசுகள்தான். இதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு பேருந்துகளுக்கான டீசலை தனியார் பங்குகளில் நிரப்பிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. போக்குவரத்துக் கழகத்துக்கான டீசல் விலையை கடுமையாக மத்திய அரசு உயர்த்திவிட்டதால் அதனை பயன்படுத்தாமல் தனியார் பங்குகளில் நிரப்பிக் கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் 3,650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான டீசல் கொள்முதல் செய்வது இன்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் இன்று முதல் பெட்ரோல் பங்குகளில் அரசுப் பேருந்துகளும் கியூவில் நின்று டீசல் நிரப்பி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications