ஃபேஸ்புக் மூலம் மக்களின் குறைகளை தீர்க்கும் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா
மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காகவே, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, கலெக்டர் மதுரை ஃபேஸ்புக் (https://www.facebook.com/CollectorMadurai) என்ற முகவரியில் கடந்த ஜூன் மாதம் கணக்கு தொடங்கினார்.
மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, அரசு அலுவலகங்களில் சந்திக்கும் பிரச்னைகள் உள்பட எதுகுறித்து வேண்டுமானாலும் பொதுமக்கள் இந்த முகவரியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.
ஃபேஸ்புக்கில் வரும் புகார்களை கவனிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக பரிந்துரைக்கவும் 24 மணி நேரமும் 2 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவைதவிர, தம்மிடம் ரகசியமாக புகார் கூறவும் இதில் வழியிருப்பதாகக் கூறுகிறார் அன்சுல் மிஸ்ரா.
புகார்கள் மட்டுமல்லாது பொதுப் பிரச்னைகள் குறித்து மக்கள் தங்களது கருத்துகளையும், பரிந்துரைக்கும் தீர்வுகளையும் இந்த முகவரியில் தெரிவிக்கலாம். வெறும் 10 ரூபாய் செலவிலேயே மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடுகிறது. தேவையற்ற அலைச்சலும், காலம் மற்றும் பண விரயமும் தவிர்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் மூலம் அளிக்கப்பட்ட 1439 புகார்களில், 1180 புகார்களுக்கு, அதாவது 80 சதவிகிதத்திற்கும் அதிகமான புகார்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. மாநில அரசு தவிர ரயில்வே, அஞ்சல் போன்ற மத்திய அரசு துறைகள் தொடர்பான புகார்கள் கூட ஃபேஸ்புக் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு வருவதே இந்த முயற்சி வெற்றி பெற்றதற்கு சிறந்த உதாரணம்.
மதுரை மட்டுமல்லாது, விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்ட மக்களும் தங்களது பிரச்னைகளை இந்த முகவரியில் தெரிவிக்கின்றனராம்.
சமூக வலைதளங்களால் நன்மையா தீமையா என்பது நாம் அவற்றை பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.