சிலப்பதிகாரத்தை தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்: பொற்கொல்லர்கள் போர்க்கொடி
திருப்பூர்: "தமிழக அரசின் பாடத் திட்டத்தில் எங்களை அவமானப்படுத்தும் விதத்தில் வார்த்தைகள் உள்ளன! அவற்றை நீக்கவேண்டும் என்று என்று பொற்கொல்லர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் 32 மற்றும் 34ம் பக்கங்களில் பொற்கொல்லர் இனத்தைக் கேவலப்படுத்துவது போன்ற வரிகள் வந்திருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி வரும் அந்தப் பாடத்தில், "காற்சிலம்பை களவாடிய பொற்கொல்லன்" என்கிற வரி வருகிறது. இதை பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் சத்தம்போட்டுப் படிக்கிறார்கள். அது மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் எங்கள் இன மாணவர்களிடம், "உங்க சாதிக்காரன்தான் திருடினான்" என்று கிண்டல் செய்கிறார்கள். இதனால் எங்கள் மாணவர்கள் பள்ளிக்குப் போகவே தயங்குகிறார்கள்" என்று அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.பி. பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
பொற்கொல்லர் என்பது நகை வேலைப்படுகள் செய்யும் எங்களைத்தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அந்த வரிகள் எங்களைத்தான் குறிக்கிறது".
"சிலப்பதிகாரம் என்பது பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையே இல்லாத பாடம். மனைவியை விட்டு விட்டு இன்னொருத்தியுடன் போகிறான் கோவலன்... அடுத்தவன் கணவன் என்றும் பார்க்காமல் அவனை ஏற்றுக்கொள்கிறாள் மாதவி, தவறு செய்யும் கணவனைக் கண்டிக்காமல் - திருத்தாமல் அவனே சரணாகிதி என்கிறாள் கண்ணகி, விசாரிக்காமலே தண்டனை கொடுக்கிறான் மன்னன் பாண்டியன்... இதையெல்லாம் விடக் கொடுமை... அரசன் ஒருவன் தவறு செய்ததற்காக ஊரையே எரிக்கிறாளாம் கண்ணகி... அதுவும் தன் முலையை அறுத்து வீசி... இதில் எதாவது அறிவுக்கு உகந்ததாகவோ, மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவோ இருக்கிறதா...
அறியா வயதில் பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் மனதில் இந்த சிலப்பதிகாரம் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்க வேண்டும். ஆகவே பள்ளிப் பாடத்திலிருந்து சிலப்பதிகாரத்தை நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்க தீர்மானித்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
"ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாகி கொன்றவர் தனு என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அவரது சாதியையா குறிப்பிடுகிறார்கள். இதில் (சிலப்பதிகாரம்) மட்டும் தவறு செய்தவன் பெயரைச் சொல்லாமல் அவன் இனத்தை ஏன் குறிப்பிட வேண்டும்" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறிய கருத்துக்களை நீக்கக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில் சிலப்பதிகாரத்தையே நீக்க கோரி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர் தமிழ்நாட்டு பொற்கொல்லர்கள்.